Followers

Powered by Blogger.

லின் சீ (Lin Chi) என்ற பிரபல ஜென் துறவிக்குச் சிறு வயதில் இருந்தே படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு. அவரிடம் ஒரு சிறு படகு இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார். பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான்.

ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது.

தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார். பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது.

"என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன். அந்தப் படகு எனக்கு குருவாக இருந்தது. இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று எனக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது" என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.

ஜென் தத்துவங்கள் ரத்தினச் சுருக்கமானவை; கருத்தாழம் மிக்கவை. இந்தக் காலிப் படகின் பாடமும் நன்றாகச் சிந்தித்தால் நமக்கு விளங்கும்.

பொதுவாக நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை இரண்டு விதங்களில் கையாள்கிறோம். ஒன்று, காரணமாகத் தோன்றும் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம். அல்லது கோபத்தை அடக்கிக் கொண்டு விழுங்கிக் கொள்கிறோம்.

பிறர் மீது கோபித்து, அனல் கக்கி ஓயும் போது பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை. குற்ற உணர்வு, பச்சாதாபம், தேவை இருந்திருக்கவில்லை என்கிற மறுபரிசீலனை என்று பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுகிறோம். இது ஒரு புறமிருக்க இதன் விளைவாக அந்தப்பக்கமும் கோபமும், வெறுப்பும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தால் விளைவுகள் விபரீதமே.

ஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது வெளிப்பட்டே தீரும். அது இயற்கை.

அது நம் கோபத்திற்குக் காரணமான நபர் மீதிருக்கலாம். அல்லது பாவப்பட்ட வேறு யார் மீதாகவோ இருக்கலாம். விழுங்கியது வெளிப்படவே செய்யும். நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர் முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும்.

ஆக இந்த இரு வழி முறைகளும் நம்மைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்கின்றன. பின் என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதில் தான் காலிப்படகுப் பாடம்.

கோபமே அவசியமில்லை, கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவது தான் கோபத்திற்கு மருந்து.

ஒரு நண்பர் வந்து நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் நாம் சிரித்து பதிலுக்கு நாமும் ஏதாவது கிண்டலாக சொல்வோம். ஆனால் ஒரு நாள் நாம் பல பிரச்னைகளால் மனநிலை சரியில்லாமல் இருந்தால் அன்று அந்த நண்பரின் கிண்டல் நம்முள் ஒரு எரிமலையையே ஏற்படுத்தக்கூடும். அவரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும். மனம் வீணாகப் புண்படும். கடுகடுப்புக்கு முகமும், கடுஞ்சொற்களுக்கு நாக்கும் தயாராகும்.

இந்தச் சிறிய தினசரி அனுபவம் ஒரு பேருண்மைஅயை வெளிப்படுத்துவதை நாம் சிந்தித்தால் உணரலாம். அடுத்தவரது சொற்களோ, செயல்களோ மட்டுமே கோபத்திற்குக் காரணம் என்றால் அவற்றை எப்போதும் கோபமாகத் தான் எதிர்கொள்வோம். ஆனால் உண்மையில் கோபமும், கோபமின்மையும் நம் மனப்பான்மையையும், மனநிலையையும் பொறுத்தே அமைவதை நம் தினசரி வாழ்விலேயே பார்க்கிறோம்.

வறண்ட கிணற்றில் விடப்படும் வாளி வெற்று வாளியாகவே திரும்பும். நீருள்ள கிணற்றில் விடப்படும் வாளியே நீருடன் திரும்பும். உள்ளே உள்ளதை மட்டுமே வாளியால் வெளியே கொண்டு வர முடியும். வாளியால் நீரை உருவாக்க முடியாது.

அடுத்தவர்கள் வாளியைப் போன்றவர்கள். அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத் தான். அது கோபமாகட்டும், வெறுப்பாகட்டும், அன்பாகட்டும், நல்லதாகட்டும், தீயதாகட்டும்.

அவர்கள் நம்மில் வெளிக் கொணர்வது நாம் நம் ஆழ்மனதில் சேர்த்து வைத்திருப்பதையே. அந்த விதத்தில் அவர்கள் நமக்கு உதவியே செய்கிறார்கள். நமக்குள் என்ன உள்ளது என்பதை அவர்கள் நமக்கு உனர்த்துகிறார்கள்.

கம்ப்யூட்டர்கள் பதிவு செய்யப்பட்ட ப்ரோகிராம்கள்படி இயங்குகின்றன. அதுபோல நாமும் நம் ஆழ்மனதில் பதிவு செய்து கொண்டுள்ள ப்ரோகிராம்கள் படியே உந்தப்பட்டு செயல்படுகிறோம். அதில் எத்தனையோ பதிவுகள் தவறனவை என்பதை உணராமலேயே பலரும் வாழ்ந்து முடித்து விடுகிறோம்.

இதெல்லாம் கோபப்படத் தக்கவை, சொற்களாலோ, செயல்களாலோ தகுந்த பதிலடி தரத் தக்கவை என எத்தனையோ விஷயங்களை நாம் ஆழ்மனதில் பதிவு செய்து வைத்து இருக்கிறோம். அதன்படி அப்போதைய சூழ்நிலையையும், மனநிலையையும் பொறுத்து சிந்திக்காமல் பேசி விடுகிறோம் அல்லது செயல்பட்டு விடுகிறோம்.

எனவே ஒவ்வொன்றையும் நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம், நமது பதில் நடவடிக்கைகள் எப்படி அமைகின்றன என்பது நம்மைப் பொறுத்தே இருக்கிரது. காரணமாகத் தெரியும் மற்றவர்கள் முன்பு குறிப்பிட்டது போல் காலிப்படகுகள் அல்லது வாளிகளே.

இந்த உண்மையை நம் ஆழ்மனதில் பதிய வைத்து தவறாக மற்றவர்களைக் காரணம் காணும் ப்ரோகிராம்களைத் திருத்திக் கொள்வது மிகவும் நல்லது.

கோபம் தற்காலிகமாய் பைத்தியம் பிடிப்பது போன்றது என்பார்கள். கோபப்படுவது அதை அடையாளம் காட்டுவதற்குச் சமம். ஆராய்ந்து அறியாமல், கோபத்தைக் காட்டாமல் அடக்குவது என்பது உண்மையில் கோபத்தை ஒத்திப் போடுதலே.

எனவே இரண்டையும் தவிர்த்து விட்டு அமைதியாகவும் தெளிவாகவும் சூழ்நிலையைக் கையாளுங்கள். ஒருவர் கோபமூட்ட முனைகையில் அவரது செய்கை முக்கியமல்ல, அதை நீங்கள் எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்பது தான் முக்கியம் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.

பல நேரங்களில் மௌனமே உத்தமம். புன்னகையே சிறந்த பதில். வார்த்தகைளில் பதில் அவசியம் என நீங்கள் உணரும் போது சற்றும் கோபம் கலக்காமல் அமைதியாய் தெளிவாய் பதில் அளியுங்கள். உங்கள் அமைதியைக் குலைக்கும் அதிகாரத்தை நீங்களாக மற்றவர்களுக்குத் தந்தால் ஒழிய அவர்கள் அதைப் பெற முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.

அரிஸ்டாடில் சொன்னது போல் "கோபப்பட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றில் ஒன்றும் சரியானதாக இருக்காது" என்பதை உணர்ந்திருங்கள். கோபம் பிறக்கும் அக்கணமே அதன் அவசியமின்மையை உணர்ந்து, அழித்து, அமைதி காக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.


தேங்க்ஸ் - என்.கணேசன்

படித்த  இடம் :http://yogibala.blogspot.in/2009/05/blog-post_26.html

| edit post

ர்மயோகம், பக்தி யோகம், இராஜ யோகம், ஞான யோகம் என்ற நான்கு ஆன்மீக பத்தியங்களுக்கான நான்கு அணுகுமுறைகளை ஆராய்வோம்



Read this article in: English | Gujarati | Hindi | Marathi | Russian | Spanish | Tamil
நவீன இந்து எழுத்துப்படிவங்களில் இந்து ஆன்மீகப் பயிற்சிகளின் சுருக்கமாக நான்கு யோகங்கள் சுட்டப்படுகின்றன: கர்மம், பக்தி, இராஜம் மற்றும் ஞானம். முதலில் ஒவ்வொன்றையும் சிறிது விளக்கியப் பின்னர் “எந்த யோகம் அல்லது யோகங்களை நான் இந்த நேரத்தில் செய்வது?” என்ற கேள்வியைக் கவனிப்போம்.
கர்ம யோகம் செயல்களின் பாதையாகும். இது என்ன செய்யக் கூடாது என்பதில் ஆரம்பிக்கின்றது. பிறகு நாம் தனக்கு மட்டுமே நன்மைச் சேர்க்கும், சுயநல ஆசைகளால் உந்தப்படும் செயல்களைத் துறக்கின்றோம். அடுத்ததாக, வாழ்க்கையில் நமக்கான கடமைகளை மனசாட்சியுடன் செய்வது நிகழ்கின்றது. கர்ம யோகத்தின் முக்கிய அம்சம், சுயநலமின்றி மற்றவர்களுக்கு நன்மை ஏற்பட செயல்படுவதாகும்.இதில் நாம் வெற்றிகாணும்பட்சத்தில், நமது வேலை வழிபாடாக உருமாற்றம் காண்கின்றது. என் பரமகுரு, ஶ்ரீலங்காவின் யோகசுவாமிகள் இந்த உத்தமத்தின் கருப்பொருளைச் சுட்டி இவ்வாறு சொன்னார், “எல்லா வேலைகளும் கடவுளை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செய்யப்பட வேண்டும்.”
பக்தி யோகம் கடவுளிடத்து உறவு பூண்டிருப்பதும், கடவுளிடத்து அன்பு செலுத்துவதும் ஆகும். கடவுளைப் பற்றியக் கதைகளைக் கேட்பது, பக்தி பாடல்கள் பாடுவது, யாத்திரை, மந்திர உச்சரிப்பு, கோயில் மற்றும் வீட்டு பூஜை அறையில் வழிபடுவது போன்ற பயிற்சிகள் அடங்கியுள்ளன. பக்தி யோகத்தின் பலனாக மென்மேலும் நெருங்கிய உறவு கடவுளிடம் தோன்றிக்கொண்டே வருவதும், இந்த உறவு ஏற்படத் தேவையான குணங்களாகிய அன்பு, தன்னலமின்மை, தூய்மை ஆகியவற்றை வளர்த்தெடுத்தும், இறுதியில் ப்ராபதி எனப்படும் ஜீவபோதம் நசுங்கி கடவுளிடம் சரணாகதி ஆவதான ப்ராபதி எய்தப்படுகின்றது. எனது குரு, சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் கீழ்கண்ட உள்நோக்கு மிக்க விளக்கத்தை அளித்தார்: “கடவுளே அன்பு, கடவுளிடம் அன்பு செலுத்துவது ஆகமங்களில் [வெளிப்படுத்தப்பட்ட மறைகளில் ஒரு வகை] கூறப்பட்டுள்ள தூய பாதையாகும். உண்மையாகவே, கடவுளின் குரலான இந்நூட்கள் மறுபிறவியில் உழலும் சம்சாரிக்கு நிலையில்லாததை விரும்புவதை விடுத்து, மரணம்பிறப்பு இல்லாத பொருளை வழுத்தும்படி அறிவுறுத்துகின்றன. எவ்வாறு தெய்வத்தை நேசிப்பது, எங்கு, எப்படி, எந்த மந்திரங்கள் மற்றும் உருவகம் மற்றும் எந்த சுப காலங்களில் முன்னெடுக்கப்படவேண்டும் என யாவும் ஆகமங்களில் காக்கப்பட்டுள்ளன.
இராஜ யோகம் தியான வழியாகும். எட்டு நிலை வளர்ச்சிக்கிரம பயிற்சி முறை இதுவாகும். நன்னெறிக் கட்டுப்பாடுகள், சமயப் பயிற்சிகள், ஆசனம், பிராணாயமம், உள்வாங்கல், ஒருமை, தியானம் மற்றும் பேரானந்தம், அல்லது சமாதி. மனதின் விருத்திகளைக் கட்டுப்படுத்தி, ஆதலால் நமது உணர்வுநிலை தனது சுய கருநிலையில் அமிழ்ந்திருக்கச் செய்வதாகும். இந்த விருத்திகளைக் கட்டுப்படுத்துவது பயிற்சியினாலும், துறவினாலும் அடையப்படுகின்றது. எனது குரு மனதின் விருத்திகளைக் குறிப்பதற்காக உணர்வுநிலை என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்: “சாட்சியம் தான் காணும் உணர்வுநிலையுடம் ஒட்டியும் ஒன்றியும் போகும் பட்சத்தில், உணர்வுநிலையும் சாட்சியமும் ஒரே பொருளாகி விடுகின்றன. இவை இரண்டையும் பிரிக்கச் செய்வதே கலைநயமிக்க யோக மார்க்கம்.”
ஞான யோகம் அறிவுப்பாதையாகும். இது தத்துவப் படிப்பு மற்றும் உண்மை-உண்மையில்லாதது என பாகுபடுத்திப் பார்க்கும் முறையாகும். ஞானம் என்பது வெறும் ஞா என்ற உச்சரிப்பு மூலத்தைக் கொண்டிருப்பினும், இது அறிதல் எனும் பொருள்பட்டாலும் இதற்கு இன்னும் உயர்ந்த உட்பொருள் உள்ளது. இது வெறும் படிப்பறிவு மட்டுமன்றி, அனுபூதி ஆகும். இது பட்டறிவில் ஆரம்பித்து, அனுபூதி உள்அறிவில் சங்கமிக்கின்றது. மூன்று வளர்ச்சியூட்டும் பயிற்சிகளினால் ஆனது ஞான யோகம்: சிராவணம் (மறைநூட்களைப் படிப்பது); மனனம் (அதையே எண்ணுவதும் பிரதிபலித்துப் பார்ப்பதும்); நிதித்யாசனம் (ஆழமான விடாத் தியானம்). உபநிஷதங்களில் காணப்படும் நான்கு மகா வாக்கியங்கள் அடிக்கடி சுய பிரதிபலிப்புக்கு உள்ளாகின்றன: “பிரம்மம் உணர்வுநிலை”; “அதுவே நீ”; “தான் பிரம்மம்”; “நானே பிரம்மம்”. சின்மயா மிக்ஷன் ஸ்தாபகராகிய சுவாமி சின்மயானந்தா போதித்தது, “ஞான யோகத்தின் குறிக்கோள் என்னவெனில், பகுத்தறிவின் மூலமாக, உண்மையையும் உண்மையில்லாததையும் வேறுபடுத்திக் கண்டு, இறுதியில் தானே உச்ச உண்மையாக இருப்பதை இனம் காண்பதே ஆகும்.”
நான்கு அடிப்படை யோகங்களையும் சுருக்கமாக கண்ட நாம், இப்போது எவ்வாறு அவை பல தரிசனங்களில் கையாளப்படுகின்றன என்பதைப் பார்ப்போம். தற்போது நீ அடைந்திருக்கும் ஆன்மீக வளர்ச்சி நிலைக்கு ஒத்தவாறு, தேவையான யோகம் அல்லது யோகங்களைத் தேர்ந்தெடுக்க இது ஒருவேளை உதவலாம்.
முதலாவதும், மிகப் பரவலாகவும் பயன்படும் அணுகுமுறை உனது மனப்பாங்கை ஒத்தியது. தென் கலிபோர்னிய வேதாந்தக் கழகம் இந்த அனுகுமுறையைத் தனது இணைய தளத்தில் வழங்குகின்றது. “ஆன்மீக ஆர்வலர்கள் பொதுவில் நான்கு விதமாக இருக்கின்றனர். அதிக உணர்ச்சிவயம், அதிக சிந்தனா ஆற்றல், அதிக உடலாற்றல், மற்றும் தியானாற்றல் மிகுதி என்ற மனப்பாங்குகள் அவை. ஒவ்வொரு விதத்திற்கும் ஏற்றவாறு நான்கு அடிப்படை யோகங்கள் உருவகம் பெற்றுள்ளன. உணர்ச்சிவயமிக்கவர்களுக்கு பக்தி யோகம், சிந்தனா ஆற்றலுள்ளவர்களுக்கு ஞான யோகம், தேகபலமிக்கவர்களுக்கு கர்மயோகம் மற்றும் தியான ஆற்றலுள்ளவர்களுக்கு இராஜ யோகம்.
இருப்பினும், சில வேளைகளில், சிந்தனா ஆற்றல் மிக்கவர்கள் ஞான யோகத்திலிருந்து ஒதுங்கியிருக்க அறிவுறுத்தபடுகின்றனர். அறிவிலிகளுக்கு இந்துமதம் என்ற தனது நூலில், லிண்டா ஜான்சன் இவ்வாறு விவரிக்கின்றார். “நீ அறிவுப்பூர்வி என நினைக்கின்றாயா? ஆச்சரியப்படுமாறாக, இந்து குருமார்கள் அறிவாலிகளை பக்தி மார்க்கத்தில் ஈடுபடும்படி அறிவுறுத்துகின்றனர், ஞான யோகம் அல்ல. ஏனென்றால், மிக அறிவாலிகள் தத்தம் இதயத்தைத் திறப்பதிலிருந்தே இன்னும் கூடுதலான நன்மைப் பெறுகின்றனர். ஞான யோகம் உறுதியான மறைபுலன் வளர்ந்து, கடவுளை அனுபவத்தால் அறிய வேண்டும் என்ற வேட்கை நிறைந்த மக்களுக்காக அன்றி, அறிவுப்பூர்விகளுக்கு அல்ல.”
இரண்டாவது அணுகுமுறை யாதெனின், உனது குணாதிசயத்துக்கு ஏற்ற ஒரு யோகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, இரண்டாம் பட்சமாக மற்ற மூன்று யோகங்களையும் சேர்ந்தே பயிற்சி செய்து வருவதாகும். தெய்வீக வாழ்க்கை மன்றத்தின் ஸ்தாபகராகிய சுவாமி சிவானந்தா நிலைநாட்டுவது என்னவென்றால், உண்மையான ஞானம் பெற வேண்டின், இயற்கையில் ஒரே ஒரு பாதைக்கு மட்டும் ஆர்வலர் ஒருவர் ஈர்க்கப்பட்டாலும், எல்லா பாதைகளிலும் இருக்கும் பாடங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டியது கட்டாயமாகின்றது. அவரது அமைப்பின் சுலோகம் “சேவை, அன்பு, தியானம், அறி” என கர்ம, பக்தி, ராஜ, ஞான யோகங்களை முறையே குறிக்கின்றது.
மூன்றாவது அணுகுமுறை நான்கு யோகங்களில் ஏதாவது ஒன்றே மிக உயர்ந்தது ஆகையால் அனைவராலும் பின்பற்றப் படவேண்டும் என வலியுறுத்துகின்றது. வைணவ அமைப்புக்களில் பக்தி யோகம் எல்லா பின்பற்றிகளுக்கும் உரிய பாதையாக வழங்கப்படுகின்றது. இதில், வைணவம் தன்னலம் கடந்த அன்பையும் சரணாகதியையும் முக்திக்கான முதன்மையான வழியாக குறிப்பதைக் காணலாம். மேலும் பக்தி யோகத்திற்கு தயாராகும் நோக்கில் கர்ம யோகத்தின் மூலம் ஒருவன் தன்னை தூய்மைச் செய்வது அறிவுறுத்தப்படுகின்றது. தியானத்துக்கு, அல்லது சதா ஆழ் தெய்வீக சிந்தனா மனோநிலைக்குத் தயாராகும் பொருட்டு ஒருவன் கர்ம யோகத்தில் ஈடுபட வேண்டும் என ஶ்ரீஇராமானுஜர் சொல்லியுள்ளார்.
சில வேதாந்த மரபுகள் ஞான யோகத்தை எல்லாருக்குமான பாதையாக காட்டுகின்றனர். எடுத்துக்காட்டுக்கு, ஆதி சங்கரரின் ஸ்மார்த்த மரபில், ஆரம்பக்கட்ட சாதனையாக கர்மயோகத்தைச் செய்து, தத்துவ பகுத்தறிவு ஆதாரத்தில் தியானிப்பது என விளக்கப்படும் ஞானயோகத்துக்கு ஒருவன் இட்டுச் செல்லப்படுகின்றான். சங்கரரின் விவேகச் சூடாமணியில் இந்தக் கருத்துக் காணப்படுகின்றது: “மனதைத் தூய்மைப்படுத்தவே காரியங்கள், உண்மையைக் கண்டுகொள்ள அல்ல. உண்மையை அறிவது பகுத்தறிவினால் மட்டும் ஒழிய கிஞ்சிற்றும் கோடிக்கணக்காண காரியங்களால் அல்ல.”
நான்காவது அனுகுமுறை கர்ம யோகம், பக்தி யோகம், ராஜ யோகம் என்ற பயிற்சிகள் யாவும் கடவுளிடம் ஒன்றிணைந்து இருப்பதை அறிவதற்கு அல்லது ஞானயோகத்திற்கான அத்தியாவசிய தேவைகள் எனக் கொள்கின்றது. நியூ யோர்க் விஸ்வ தர்ம மண்டலத்தின் சுவாமி இராமகிருஷ்ணானந்தா எழுதியுள்ளார்: “ஞான யோகத்துள் நுழையும் முன், ஒரு மாணவன் சேவை அல்லது கர்மயோகம், கடவுளிடம் அன்பு அல்லது பக்தி யோகம், தியானம் அல்லது இராஜயோகம் ஆகியவற்றில் திளைத்தும் வளர்ந்தும் இருத்தல் முக்கியமாகின்றது. காரணம், முன்னேற்பாடுகள் இன்றித் தத்துவங்களைப் படிப்பதால் ஒருவன் தன்னை ‘உதட்டளவு வேதாந்தி’ அதாவது தனக்கு உண்மையிலேயே தெரியாத ஒன்றைப் பற்றி பேசும் ஒருவனாக உருமாற்றிக்கொள்ளும் ஆபத்து இருக்கின்றது.”
சிவானந்த யோக வேதாந்த நிலையத்தின் சுவாமி விஷ்ணுதேவனந்தா ஒத்த கருத்தை எடுத்துக் கூறியுள்ளார்: “ஞான யோகத்தை பயிற்சிக்கும் முன்னர், மற்ற யோக மார்க்கங்களின் பாடங்களை ஒருவன் ஒருங்கிணைத்திருக்க வேண்டும். தன்னலமின்மையும் கடவுளிடம் அன்பும் இல்லாமல், உடல் மற்றும் மனவலிமை இல்லாமல், தன்னை அறியும் தேடல் வெறும் சோம்பேறிக் கற்பனையாக மாறிவிடும் சாத்தியமுண்டு.”
சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் நான்காவது அணுகுமுறையில் காணப்படும் ஞானத்தைக் கண்டார். அவர் பகர்ந்தது, “கர்ம யோகமும் பக்தி யோகமும் உயர் தத்துவங்களுக்கும் பயிற்சிகளுக்கும் தேவையான தேவை.” அவர் இந்த யோகங்கள் அல்லது பாதைகள் யாவும் திரண்டு வளரும் தளங்கள் என போதித்துள்ளார். மேலும் ஒருவன் முன்னேறிச் செல்லும் போது, எது ஒன்றும் ஒதுக்கித்தள்ளப்படக் கூடாது. பக்தியைப் பற்றி, அவர் கூறியது, “நாம் ஒருபோதும் கோயில் வழிபாட்டை விஞ்சியதில்லை. அது மேன்மேலும் ஆழமாகவும், அர்த்தமுள்ளதாகவும் ஆகின்றது, நாம் இந்நான்கு ஆன்மீகப் படிகளில் முன்னேறிச் செல்லும்போது. சரியை பாதையில் [கர்ம யோகம்] தன்னலமற்ற காரியமாற்றும் நிலையில், நாம் கோயிலுக்குச் செல்வதற்கான காரணம், நாம் செல்ல வேண்டும் என்ற கட்டாயம், இது நம்மிடம் எதிர்பார்க்கப் படுகின்றது. கிரியைப் [பக்தி] பாதையில் வழிபாடு மிக்க சாதனை நிலையில், நாமே வேண்டி அங்கு செல்கின்றோம்; கடவுளிடம் இருக்கும் காதலே உந்துதலாக இருக்கின்றது. யோகப் பாதையில் நாம் கடவுளை உள்ளாராக வழிபடுகின்றோம், இதய கமலத்தில்; இருப்பினும் மனதின் அதிஉயர் உணர்வுநிலைகளில் மூழ்கியிருக்கும் யோகி கூட கோயிலை விஞ்சிவிடுவதில்லை. மண்ணுலகில் இருக்கும் கடவுளின் வீடாகிய அது -அங்கே இருக்கின்றது- யோகி மீண்டும் சாதாரண உணர்வுநிலைகளுக்கு வரும்போது. ஞானப்பாதையில் முழுதும் பயணித்தவர்களின் கோயில் வழிபாடானது மிகவும் உன்னதமானதால், அவர்களே வழிபாட்டுக்கு உரிய பொருளாகின்றனர்- வாழும், நடமாடும் கோயில்கள்.”
எந்த ஒரு யோகம் அல்லது யோகங்களைத் தேர்ந்தெடுப்பது என குழப்பமா? உனக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் இது ஒரு சிறப்பான கலந்துரையாடலாக இருக்கும். அப்படி இல்லை என்றால், பாதுகாப்பான ஓர் அணுகுமுறை கர்ம மற்றும் பக்தி யோகங்களில் தேறுவதாகும். இந்த யோகங்கள் நமது ஆணவத்துடன் மிக சீக்கிரத்தில் வேலைச் செய்து, ஆழமான அனுபவங்களுக்கு குறுக்கே இருக்கும் முக்கியமான தடைகளை நீக்குகின்றன, பெரும்பாலான நேரங்களில் இத்தடைகளைப் பலர் ஒரு பொருட்டாகக் கருதுவதே இல்லை. இப்பழக்கத்தினால் மெதுவான மனச் சுத்தியும், அதிக தன்னடக்கமும், தன்னலமின்மையும், வளர்தெழும் பக்தியும் விளைந்து, நமது எல்லாக் காரியங்களும் சீராக நம்மைக் கடவுளிடம் இட்டுச் செல்கின்றதென்ற உறுதியும் நம்முள் ஏற்படுகின்றது.


படித்த இடம் ;http://www.hinduismtoday.com/modules/smartsection/item.php?itemid=5302

| edit post

சஹஸ்ராரம் (இறுதிநிலை ஆதாரம்)

மூலாதாரம் முதல் ஆக்ஞை வரை ஆறு சக்கரங்கள் ஆதாரமாய்த் திகழ்கின்ற போது , மூன்று நாடிகளால் இவை ( இடகலை , பிங்கலை, சுழுமுனை)கள் இரண்டிரண்டாய் பின்னப்படுகின்றன. இரண்டு சக்கரங்கள் சேருமிடம் ஒவ்வொன்றும் ஒரு முடிச்சு (கிரந்தி) எனப்படும். மூன்று கண்டங்கள் எனவும் கூறப்படுகின்றது. ஆதாரங்கள் ஆறும் கடந்தால் அங்கிருந்து அதாவது புருவ மத்தியில் இருந்து "பிரம்ம ரந்திரம்" என்ற பகுதி வரை எட்டு பகுதிகள் உள்ளன என்று சித்தர்கள் கூறுகின்றனர். இவைகள் இந்து, ரோதினி , நாதம், நாதாந்தம் , சக்தி , வியாபினி, சுமணி, மனோன்மணி என்ற பெயர்களை உடைய தான எட்டு கலைகளும் இவைகளே. இவ்வாறு ஆறு ஆதாரங்களுக்குப்பின் ஏழாவதாக ஆயிரம் இதழ் தாமரை என்றும் சஹஸ்ராரம் என்றும் கூறப்படும் சிரசின் உச்சி பாகமும், மனித உடலின் தலைக்கு மேல் பரவெளியோடு தொடர்புடையதும் காஸ்மிக் எனர்ஜி எனப்படும் பிரபஞ்ச சக்தியோடு நம்மை இணைக்கும் சஹஸ்ராரம் என்றும் 7வது தளமாகும். யோக வெற்றியினால் வரிசையாக ஆறு ஆதாரங்களைக் கடந்து ஏழாவது ஆதாரமான சஹஸ்ராரம் அடையும்போது மேற் சொன்ன அனைத்து சித்திகளும் பேரானந்த அனுபவமும் கிட்டுமென ரிஷிகள் கூறுகின்றனர். " வாசி" என்ற ஜீவனுக்கு ஆதாரமான உயிர்க்காற்றை இடகலை-பிங்கலை (இடம், வலமாக) ஏற்றி இறக்கி கும்பகம் மற்றும் (அகக்கும்பகம், புறக்கும்பகம்) என்பது போன்ற பல்வேறு பயிற்சிகளை முறையாகச் செய்வதே பிராணாயாமம் எனப்படும் பிராண ஆகுதி ஆகும். இதன் மூலமே கடினமான மற்றும் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்வதன் மூலமே பிராணனை உணர்ந்து குண்டலினி சக்தியினை கீழிருந்து மேலேற்றி சஹஸ்ராரத்தை அடைவதற்கான வழிகளின் முதன்மையானதெனக் கூறுகின்றனர். அடுத்து பிராணாயமம் பற்றிய முக்கிய தொடர் விரைவில் வெளிவரும்.

Tuesday, June 30, 2009

ஆக்ஞை

சதாசிவனாரும் , மனோன்மணியாய் விளங்கும் ஞானத் தாயும் , கூடி மகிழும் ஆக்ஞை புருவ மத்தி அல்லது புருவ நடு ஸ்தானமே "ஆக்ஞை" என்ற ஆறாவது தலமாகும்.

இத்தலம் ஆறு ஆதாரங்களின் கடைசி என்றாலும் இதற்கடுத்தும் 7வது ஆதாரமான சஹஸ்ராரம் என்ற ஆதாரமே இறுதி ஆதாரமாகும்.

ஆக்ஞையின் வடிவம் வட்டமும்
அதன் வெளிப்புறத்தில் வலமும் இடமமுமாக ஒட்டி இரண்டு தளங்களும் அதில் ( 'ஹ','க்ஷ') என்ற இரு அக்ஷ்ரங்களுடையதாயும் திகழ்கின்றது.

விசுத்தி

ஆகாச தத்துவிறக்கமான "விசுத்தி" என்ற கழுத்து (கண்டம்) பகுதி முழுதும் நிறைந்து நிலவும் ஆதார சக்கரமாகும்.

இதன் வடிவம் அறுகோண வடிவின் மத்தியில் 16 தளங்கள் (இதழ்கள்) கொண்ட வட்டவடிவம் கொண்டதாகும்.

பஞ்சாக்ஷரத்தின் நான்காவது. எழுத்தான "வ" காரமாய் , "ஹம்" என்ற பீஜமாகவும் திகழுகின்ற ஆதாரமாகும் .

16 தளங்களில் 51 அக்ஷரங்களில் 16 உயிரெழுத்துக்களை கொண்டும் 72 சந்திர கலை அமிர்தஸ்தலமாகும் . அமிர்தம் பரவும் இடமுமாகும்.

ஆக்ஞையினின்றும் பெருகும் பரமானந்தத்தை ஜீவர்களுக்கு விநியோகிக்கும் தலமாகும்

Saturday, June 27, 2009

அனாகதம் (இதய கமலம் )

டுத்ததாக இதய கமலம் என்று அழைக்கப்பெறும் மார்புபகுதி முழுதும் வியாபித்திருக்கும் அனாகதம் என்ற ஆதாரச் சக்கரம் பல முக்கியச் சிறப்பத் தன்மைகளை கொண்டதென சித்த புருஷர்கள் விவரிக்கின்றனர். 

மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் , மணிப்பூரகம், விசுத்தி, ஆக்ஞை என்று ஆறாக இருந்தாலும் சஹஸ்ராரம் என்ற 7 வது ஆதாரமே இறுதி ஆதாரமாகும். 

ஏனைய ஆறு ஆதாரங்களுக்கும் நிலைக்களனாய் இருந்துகொண்டு பிராண ஆராதனையில் தன் இயக்கத்தை நிலை நிறுத்துகிறது. 

மேல் மூன்று சஹஸ்ராரம்,ஆக்ஞை,விசுத்தி, கீழ் மூன்று மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் , மணிப்பூரகம் இவ்விரண்டிற்கும் மைய கேந்திரமாக அனாகதம் ஒளிர்கின்றது. 

ஏனைய ஆதாரங்களை இயக்குவதன் மூலம் பிராண ஆதாரனை செய்திடினும் இயல்பாகவே சதா சர்வகாலமும் பிராண ஆதாரனையினை செய்து கொண்டிருப்பது அனாகதமே. 

அனாகதம் என்றால் அனாதி, சதா ஓங்கார ஒலியினை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதாகும். 

ஸ்வாதிஷ்டானம் 52 அக்னி கலைகளையும் , மணிபூரகம் 52 சூரிய கலைகளைக் கொண்டதுபோல,அனாகதம் 54 சூரிய கலைகளைக்கொண்டு ஜோதி வடிவானதாகவும், இறைவன் ருத்ர ரூபியாய் இங்கே வீற்றிருத்தாலும், பஞ்சாக்ஷ்ரங்களின் நடு எழுத்தாய் விளங்கும் "சி " , நெருப்பின் பஞ்ச பூத தத்துவமாகவும், எல்லாவற்றிலும் மேலாக எப்போதும் அனாதியாய் ஓங்கார சப்தத்தையும் (உடல் முழுதும் சிரசு வரை) மின்னலின் கண் தோன்றும் இடி சப்தத்தையும் எழுப்பிக்கொண்டே இருப்பதோடு ஒவ்வொரு அணுவிலும் அதன் அதிர்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும். 


இந்த ஆதாரத்தை அறிந்து அதனுள் பிரவேசித்து விட்ட எந்த சாதகரும் மேலும் அடுத்தடுத்த ஆதாரங்களை அடைந்து மேம்படுவார்களேயன்றி அவர்களுக்கு கீழிறக்கமில்லை என்று ரிஷிகள் வர்ணித்துள்ளனர். 

சாதகர்கள் அனாகத கேந்திரத்திற்கு தன்னை வியாபித்துக்கொள்ளும்போது கீழாதரங்களில் தாம் பெற்ற அனைத்து அனுபவங்களையும் ஆழ்ந்துணரும் சித்த வடிவாக ஒளியாய் சூட்சம ஒலி உந்துதலால் மேல் மேல்நோக்கி பயணித்து சிவசக்தி சங்கமத்தில் உருவாகும். 

ஆராவமுதை பருகும் நிலைக்கு ஆட்படுத்தபடுவார்கள் . இதுவே அனாகத தளத்தின் சிறப்பு வாய்ந்த தலமாக இருப்பது கண்கூடும். 

ஒளி, ஒலி இரண்டின் அனைத்து பரிமாணங்களில் ஒருசேரத் திகழும் ஆதாரமும் ஆகும். வட்டத்தின் நடுவே முக்கோணமும் , வட்டத்தின் வெளியே 12 யோக நாடிகளைக் கொண்டதாகவும், 

அக்ஷர (க,க2,க3,க4, ங ,ச1,ச2, ஜ3,ஜ4, ஞ,ட1,ட2) தளங்களை உடையதாகவும் உள்ளது.

Thursday, June 25, 2009

மணிபூரகம்

மணிபூரகம் 
  'தொப்புள்' என்றும் 'நாபி' என்றும் குறிக்கப்படும் கேந்திரம் முழுவதும் பரவி நிற்பதும், முதுகுத்தண்டின் கீழிருந்து மேலாக மூன்றாவது ஆதார இணைப்புபாதையாகும். 

இதன் உருவம் வட்டமும், வட்டத்தினுள் அமைந்த மேல்நோக்கிய இரு கொம்புவடிவ பிறைச்சந்திரன் உருவத்தை கொண்டதாகும். 

வட்டத்தினுள் வெளியே தொட்டபடி பத்து தளங்கள் கொண்ட (இதழ்கள்) ஒவ்வொன்றிலும் (டட, ணத , தத, தந , பப) என்ற பத்து அக்ஷரங்களைக் கொண்டுள்ளது. இதுவே பத்து யோக நாடிகளாய் மிளிருகின்றது. 

ஸ்வாதிஷ்டானம் இரண்டாவது ஆதாரம் (சக்கரம்)

ஸ்வாதிஷ்டானம்
ஸ்வாதிஷ்டானம் என்ற சக்கரம் மூலாதாரத்திற்கு அடுத்த நிலையில் உள்ள இரண்டாவது சக்கரமாகும். 

சுவாசம் என்ற பிராணனின் இருப்பிடம் குண்டலினியின் பிராண வடிவில் 
தன் சக்திகள் இங்கே கேந்த்ரமாக தன்னை வியாபித்துக் கொண்டிருக்கும் குறி ஸ்தானமாகும். 

இதன் உருவம் சதுரம் ஆகும். 

சதுரத்தை தன்னுள் அடக்கி வெளிவட்டமாகவும், வட்டத்தை ஒட்டியவாறு சுற்றிலும் ஆறு இதழ்களை கொண்டதாக உள்ளது. 

இந்த ஆறு இதழ்களிலும் ஸ , ஹ , ம், ய, ர, ல என்ற ஆறு எழுத்துக்களும் 
ஆறு தளங்களாக , ஆறு யோக நாடிகளாக மையம் கொண்டுள்ளது.

பஞ்சாக்ஷரத்தின் முதல் எழுத்தான "ந" எழுத்தின் சப்த பரிமாண எழுச்சி உடையதாகவும் , ரம் என்ற பீஜாக்ஷர அக்னி ரூபமாகவும் திகழுமிடமாகும்

Wednesday, June 24, 2009

ஏழு ஆதாரங்கள் என்ற சக்கரங்கள் (மூலாதாரம்)

ஏழு ஆதாரங்கள்  

ஆதாரம் என்பது நம் உடலில் கண்ணுக்கு தெரியாமல் (சூட்சமத்தில் ) இருக்கக்கூடிய சக்தி மையங்கள் ஆகும் . இவை ஏழு இருப்பதாக யோகிகள் கூறுகின்றனர். 





படித்த இடம் :http://www.maharishipathanjali.com/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

| edit post

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates