Followers

Powered by Blogger.

திருநெடுங்களம்

Posted by ss Sunday, July 28, 2013

1.52 திருநெடுங்களம்

 
பண் - பழந்தக்கராகம்

559மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1.52.1
560கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1.52.2
561நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1.52.3
562மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1.52.4
563பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1.52.5
564விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1.52.6
565கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1.52.7
566குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும்
நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1.52.8
567வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்
சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1.52.9
568வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1.52.10
569நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்
நாடவல்ல பனுவல்மாலை ஞானசம் பந்தன்சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.
1.52.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நித்தியசுந்தரர், தேவியார் - ஒப்பிலாநாயகியம்மை.


படித்த இடம் :http://www.shaivam.org/tamil/thirumurai/thiru01_052.htm



திருநெடுங்களம்

பாடல் எண் : 1

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பொழிப்புரை :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, வேதங்களைத் தனக்கு உடைமையாகக் கொண்டவனே, தோல் ஆடை உடுத்தவனே, நீண்ட சடை மேல் வளரும் இளம் பிறையைச் சூடியவனே, தலைக்கோலம் உடையவனே, என்று உன்னை வாழ்த்தினாலல்லது குறை உடையவர்களின் குற்றங்களை மனத்துக் கொள்ளாத நீ, மனத்தினால் உன்னையன்றி வேறு தெய்வத்தை நினையாத கொள்கையில் மேம்பட்ட நிறையுடைய அடியவர்களின் இடர்களை நீக்கி அருள் வாயாக.

குறிப்புரை :

மறையுடையாய் என்பது முதலிய சொல்லித் தோத் திரித்தால் அல்லது குறையுடையார் குற்றத்தை ஆராயாத தேவரீர், நிறையுடையார் துன்பத்தையும் களையவேண்டும் என்கின்றது. மறை உடையாய் என்பது முதலியன நிறைந்த மறையையும், அருவருக்கத் தக்கதோலையும், சாபம் ஏற்ற மதியையும் ஒப்பமதிக்கும் பெரியோனே எனப் பின்னர்வரும் `குறையுடையார் குற்றம் ஓராய்` என் பதற்கு இயைய அமைந்திருத்தல் காண்க. ஓராய் - ஆராயாதவனே.

பாடல் எண் : 2

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பொழிப்புரை :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, ஆரவாரித்து எழுந்த, வெண்மையான அலைகளால் சூழப்பட்ட கடல் நஞ்சினைத் தினையளவாகச் செய்து உண்டு கண்டத்தே நிறுத்திய மேம்பட்ட தேவனே, நின்னை மனத்தகத்தே நிறுவியவர்களின் ஆடல், பாடல்களை விரும்பி, இரவும் பகலும் நின்னையே நினைத்து எழும் அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக.

குறிப்புரை :

ஆகாத நஞ்சை அழகியமிடற்றில் வைத்த பெருமானே! அல்லும் பகலும் தியானிக்கும் அடியார் இடர்களைவாயாக என்கின்றது. கனைத்து - ஒலித்து. தினைத்தனையா - அதன்பெருமை எல்லாவற்றையும் அடக்கித் தினையளவாகச்செய்து. மிடறு - கழுத்து.

பாடல் எண் : 3

நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியா னுயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பொழிப்புரை :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, குற்ற மற்றவனே, நின் திருவடிகளையே வழிபடும் மார்க்கண்டேயன் நின்னையே கருதிச் சரண்புக அவனைக் கொல்லவந்த வலிமை பொருந்திய கூற்றுவனைச் சினந்து, `என் அடியவன் உயிரைக் கவராதே` என்று உதைத்தருளிய உன் பொன்னடிகளையே வழிபட்டு, நாள்தோறும் பூவும், நீரும் சுமந்து வழிபடும் உன் அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக.

குறிப்புரை :

காலகாலராகிய நின்னடியையே கருதும் அடியார்கள் இடரைக்களைக என்கின்றது. நிமலா, நின் அடியே வழிபடுவான் நினைக்கருத (நீ)`என் அடியான் உயிரை வவ்வேல்` என்று அடல் கூற்று உதைத்த பொன்னடியே பரவி எனக் கூட்டிப் பொருள்காண்க. சுமக்கும் அடியார் இடர்களையாய் என்றது, இவர்கள் வினை இடையீடாக இருந்ததாயினும் சுமைக்குக் கூலி கொடுப்பார்போல, அடியார்கள் பூவும் நீரும் சுமந்தமைக்காகவாவது நீர் அருள்வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியது.

பாடல் எண் : 4

மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பான் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கு மவிர்சடையா ரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றா ணிழற்கீழ்
நிலைபுரிந்தா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பொழிப்புரை :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, இமவான் மகளாகிய பார்வதிதேவியைத் தன் திருமேனியின் ஓர் பாதியாகக் கொண்டு மகிழ்பவனே, அலைகள் வீசும் கங்கை நீரைத் தாங்கிய விரிந்த சடையினையுடைய திருவாரூர் இறைவனே, தலையோட்டை விரும்பி ஏந்தி அதன்கண் பலியேற்று மகிழ்பவனே, தலைவனே, நினது திருவடி நீழற்கீழ் நிற்றலையே விரும்பும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.

குறிப்புரை :

மலைமகளையொருபாலும், அலைமகளைத் தலை மேலும் வைத்து மகிழ்ந்த தேவரீர், நின்னடி மறவாத நிலையுடையார் இடரைக்களைக என்கின்றது. புரிந்த - விரும்பிய. நிலைபுரிந்தார் - அநவரத தியானத்தால் நிற்றலையுடையவர்கள்.

பாடல் எண் : 5

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்றா ணிழற்கீழ்
நீங்கிநில்லா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பொழிப்புரை :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, குணங்களால் நல்லவர்களும், தவவேடம் தாங்கியவர்களும். பாரிடை வாழும் மக்களும் பலருடைய இல்லங்களிலும் பலிதேரும் உனது செயல்களில் மனம் ஒன்றி நல்லோர் பாடும் பாடல்களோடு தொழத்தக்க உன் திருவடிகளை வணங்கிக் கரை கடந்த அன்போடு தலைவனாகிய உனது திருவடி நிழலை நீங்கி நில்லாதவர்களாகிய அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக.

குறிப்புரை :

இடையீடின்றியே திருவடிக்கண் உறைத்து நிற்கும் அன்பர் இடர்களையாய் என்கின்றது. தலைவ, நெடுங்களமேயவனே, நல்லார் செய்வார் நல்லார் பாடலொடு அன்பினோடும் நின் தாள் நிழற்கீழ் நீங்கி நில்லார் இடர்களையாய் எனக் கூட்டிப் பொருள் காண்க. பாங்கின் - குணங்களால். படிமம் - தவவேடம். தூங்கி - மனம் ஒன்றி. தாங்கிநில்லா அன்பினோடும் - தம்மளவில் பொறுக்கலாற்றாது கரைகடந்துவருகின்ற அன்போடும்.

பாடல் எண் : 6

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய வாதிதேவ னடியிணையே பரவும்
நிருத்தர்கீத ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பொழிப்புரை :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, மூத்த வேடந்தாங்கியும், இளமை வடிவங்கொண்டும், வேதங்கள் நான்கையும் நன்குணர்ந்த தலைவனாய் கங்கை நங்கையை மணம் கமழும் சடைமிசைக் கரந்துள்ள பெருமானே, கலைஞானங்கள் மெய்ஞானங்களின் பொருளான முதற்கடவுளாய உன் அடி இணைகளைப் பரவி ஆடியும் பாடியும் போற்றும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருள்வாயாக.

குறிப்புரை :

விருத்தகுமாரபாலராகிக் கங்கையைச் சடைமேற்கரந்த பெருமானே, நின்னடிபரவும் ஆடல் பாடலையுடைய அடியார்களின் இடரைக்களைவாயாக என்கின்றது. கருத்தனாகி - முழுமுதற் கடவுளாகி. அருத்தன் - பொருளானவன். நிருத்தர் - ஆனந்தத்தால் நிருத்தம் செய்பவர். கீதம் - பாடுபவர்.

பாடல் எண் : 7

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த
நீறுகொண்டா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பொழிப்புரை :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, உமையம் மையைத் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவனே, அரி, எரி, காற்று ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கூட்டிய ஒப்பற்ற கொடிய அம்பினால் வேதவழக்கோடு பகை கொண்ட அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த மன்னவனே, கொடி மீது இடபத்தை இலச்சினையாகக் கொண்டவனே, இதுவே மணம் பொருந்திய சந்தனமாகும் என்று எம்பெருமானே நீ அணிந்துள்ள திருநீற்றை விரும்பி அணியும் அடியவர்களின் இடரை நீக்கியருள்வாயாக.

குறிப்புரை :

திரிபுரம் எரித்த மன்னவனே, விடைக்கொடி உடையவனே, நீறு அணிந்த அடியார்களது இடரைக் களைக என்கின்றது. கூறுகொண்டாய் - உமாதேவியை ஒருபாகத்துக்கொண்டவனே. மூன்றும் ஒன்றாகக்கூட்டி ஓர் வெங்கணையால் - அரி, எரி, கால் என்ற மூன்றையும் ஒன்றாகக்கூட்டிய ஓர் அம்பினாலே. இதனை `எரி காற்று அரி கோல்` என்னும் திருவீழிமிழலைப் பதிகத்தானும் அறிக.(1-11-6) மாறு - பகை. சாந்தம் - சந்தனம்.

பாடல் எண் : 8

குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூ ழிலங்கை
அன்றிநின்ற வரக்கர்கோனை யருவரைக்கீ ழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும்
நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பொழிப்புரை :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, மேருமலை யின் சிகரங்கள் மூன்றில் ஒன்றாகிய குன்றின்மேல் விளங்குவதும் கொடிகள் கட்டப்பட்ட மதில்களால் சூழப்பட்டதுமான இலங்கை நகர் மன்னனும், உன்னோடு மாறுபட்டுக் கயிலை மலையைப் பெயர்த்தவனுமான அரக்கர் தலைவனாகிய இராவணனை அரிய அம்மலையின் கீழே அடர்த்தவனே! என்றெல்லாம் நல்ல தோத்திரங்களைக் கூறி இரவும் பகலும் உன்னையே ஏத்தி நின்று மனம் நையும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருளுவாயாக.

குறிப்புரை :

இராவணனை அடர்த்தாய் என்று தோத்திரித்து, இராப் பகலாக உருகித் தொழுகின்ற அடியார்களின் இடரைக் களைவாயாக என்கின்றது. உச்சிமேல் விளங்கும் இலங்கைக் குன்றின் - மேருமலையில் இருந்து, வாயுதேவனால் பெயர்த்து வீழ்த்தப்பெற்ற மூன்று சிகரங்களுள் ஒன்றாகிய இலங்கைக்குன்றின். அன்றி - கோபித்து; பகைத்து எனலுமாம். வாய் மொழி - தோத்திரம். நைவார் - மனங்கனிவார்.

பாடல் எண் : 9

வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ்
சூழவெங்கு நேடவாங்கோர் சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்
நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பொழிப்புரை :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, கஞ்சனால் ஏவப்பட்டுத் தன்னைக் கொல்ல வந்த குவலயாபீடம் என்ற யானையின் கொம்புகளை ஒடித்த திருமாலும், புகழ்பெற்ற நான்முகனும், தங்களைச் சூழ்ந்துள்ள இடமெங்கும் தேடுமாறு இருவருக்கும் இடையே சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்றவனே, பன்றியினது கொம்பை அணிகலனாக அணிந்த பெருமானே, அழிவற்ற உன் பொன்போன்ற திருவடி நீழலில் வாழும் அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாய்.

குறிப்புரை :

அயனும் மாலும் தேடச் சோதியாய்நின்ற பெருமானே! நின் திருவடிக்கீழ்வாழும் அடியாரது இடரைக்களைவாயாக என்கின்றது. வேழம் - குவலயாபீடம் என்னும் யானை. கண்ணன் கஞ்ச னால் ஏவப்பட்ட குவலயாபீடம் என்னும் பட்டத்து யானையின் கொம்பை ஒடித்தார் என்பது வரலாறு. நேட - தேட. கேழல் - பன்றி. அடியின்நீழல் வாழ்வார் - திருவடிச்சார்பே சார்பாகக்கொண்டு மற்றொன்றையும் சாராத அடியார்கள்.

பாடல் எண் : 10

வெஞ்சொற்றஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பொழிப்புரை :

கொடுஞ் சொற்களையே தம் சொற்களாக்கிக் கொண்டு தமது வேடத்திற்குப் பொருந்தாமல் ஒழுகும் சமணரும் நற்சார்பில்லாத புத்தர்களும் சைவசமயம் கூறும் உண்மைப் பொருளை ஒரு சிறிதும் உணராதவர்கள். அவர்களை விடுத்து, திருநெடுங்களம் மேவிய இறைவனே! அழியாப் புகழுடைய வேதங்களோடு, தோத்திரங்களால் நின்னைப் பரவி நின் திருவடிகளை நெஞ்சில் கொண்டு வாழும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருளுவாயாக.

குறிப்புரை :

சமணரும் புத்தரும் பொருளுண்மை அறியாதவர்கள். ஆதலால் அவர்கள் உரையை விட்டு நின்னடியையே நெஞ்சில் வைப்பாரது இடர்களைவாய் என்கின்றது. வெம் சொல் - கொடுஞ்சொல். சமணர்கள் கொடுஞ்சொல்லையே எப்பொழுதும் பேசி, கொண்டவேடத்திற்குப் பொருந்தாதிருப்பர் எனக் குறிப்பிடப்படுகிறது. தஞ்சம் - நற்சார்பு. சாக்கியர் - புத்தர். தத்துவம் - பொருளுண்மை. துஞ்சல் இல்லா - இறவாத. வாய்மொழி - வேதம்.

பாடல் எண் : 11

நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே.

பொழிப்புரை :

மேலும் மேலும் நீண்டு வளரத்தக்க சடைமுடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய திருநெடுங்களத்தை, பெரியோர் பலர் வாழும் பெரிய வீதிகளை உடைய சிரபுரம் என்னும் சீகாழிப்பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய, நன்மைப் பொருளால் ஆராய்ந்து உணரத்தக்க இப்பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்களின் பாவங்கள் விலகும்.

குறிப்புரை :

இப்பாடல் பத்தும் பாடவல்லார் பாவம் பறையும் எனப் பயன்கூறுகிறது. நீட வல்லவார்சடையான் - மேலும் வளரத்தக்க நீண்ட சடையையுடையவன். சேடர் - இளைஞர். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொருபனுவல்போல் பயன்விளைத்தலின் பனுவல்மாலை எனப்பட்டது.
  படித்த இடம்:http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=10520

0 comments

Post a Comment

Blog Archive

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates